Publish Date: Wed, 07 Jul 2021 (12:10 IST)
Updated Date: Wed, 07 Jul 2021 (12:12 IST)
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, அதன் பின் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துவிட்டு இந்தியில் நடிக்க தொடங்கினார். அங்கே அமிதாப்புடன் அவர் நடித்த பிங்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.
அவர் நடித்த தப்பாட் திரைப்படம் மிகப் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இதையடுத்து கடைசியாக வெளியான ஹசீன் தில்ருபா படம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இப்படியான நேரத்தில் பாலிவுட்டில் பாலின ஏற்ற தாழ்வு அதிகம் இருப்பதாக குறை கூறியுள்ளார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களை குறைந்த பட்ஜெட்டில் தயாரிப்பதாகவும் அதற்கு முக்கிய காரணம் நடிகர்களை கொண்டாடும் அளவுக்கு ரசிகர்கள் நடிகைகளை கொண்டாடுவதில்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஒரு ஆண் அதிகம் சம்பளம் கேட்டால் அவர் வெற்றிக்கு கிடைத்த அங்கீகாரம் என்கிறார்கள். அதுவே பெண் நடிகை கேட்டால் சம்பளம் விஷயத்தில் கறார் என முத்திரை குத்திவிடுறார்கள். நான் சினிமாவில் கால் பதித்தபோது என்னுடன் நடிக்க தொடங்கிய பல ஆண் நடிகர்கள் தற்போது என்னை விட 3 முதல் 5 மடங்கு வரை அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என பாலிவுட் திரைத்துறையில் நடக்கும் சம்பவங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.