Publish Date: Thu, 04 Jun 2020 (13:29 IST)
Updated Date: Thu, 04 Jun 2020 (13:35 IST)
கேரளாவில் ஊருக்குள் புகுந்த யானைக்கு அண்ணாசிப் பழத்தில் வெடி வைத்துக் கொலை செய்த மனித மிருகத்தை கண்டித்த நடிகை குஷ்பு.
கடந்த வாரம் கேரள மாநிலம், மலப்புரம் கிராமத்துக்கு அருகில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதனைப் பார்த்த சிலர் அண்ணாசிப் பழம் ஒன்றை அந்த யானைக்கு கொடுத்துள்ளனர். அந்த அண்ணாசிப் பழத்தை யானைக் கடிக்கையில் அதில் வைக்கப்பட்டு இருந்த வெடி ஒன்று வெடித்துள்ளது. இதனால் யானையின் நாக்கு மற்றும் வாய் கடுமையாக காயமடைந்துள்ளது.
இதையடுத்து வலியுடனேயே அந்த கிராமத்தைச் சுற்றி வந்த யானை, அந்த ஊரில் இருக்கும் வீட்டையோ மனிதர்களையோ தாக்கவில்லை. இதையடுத்து வெள்ளியாற்றில் இறங்கி நின்றுள்ளது . வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை கும்கி யானைகளோடு மீட்க முயன்றுள்ளனர். ஆனால் ஆற்றை விட்டு வெளியே வராத அந்த யானை, மே 27 ஆம் தேதி இறந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர் முன் நடந்த பிரேதப் பரிசோதனையில் அந்த யானையின் வயிற்றில் ஒரு சிசு இருந்தது தெரிந்துள்ளது.
அந்த யானையின் மரணம் பற்றி வனத்துறை அதிகாரி சமூகவலைதளத்தில் பகிர, ஈவு இரக்கமே இல்லாமல் வெடிக்குண்டு வைத்து கொன்றவனை கண்டித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை குஷ்பு, பிரபல யூடியூப் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், " ரொம்ப கஷ்டமா இருக்குது பேசுறதுக்கே... பசியில் இருக்கும் ஒரு புள்ளத்தாச்சி யானைக்கு வெடுக்குண்டு வைத்து பழத்தை கொடுத்துவிட்டு சாதிச்சுட்டீங்களா..? மனுஷங்களா நீங்களா? எப்படி இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டு தூக்கம் வருது உங்களுக்கெல்லாம். மனிதர்களின் 6-வது அறிவை இப்படி கீழ்த்தரமான விஷயங்களுக்கு பயன்டுத்துகிறீர்களே... கேவலம் ... ரொம்ப கேவலம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.