Publish Date: Fri, 02 Sep 2016 (13:11 IST)
Updated Date: Fri, 02 Sep 2016 (13:18 IST)
காக்கா முட்டை மணிகண்டனின் இரண்டாவது படம், குற்றமே தண்டனை இன்று வெளியாகியுள்ளது. பல்வேறு சர்வதேச விழாக்களில் கலந்து கொண்ட இந்தப் படம் குறித்து அவர் பேசியவை...
ஒரு தலைக்காதலால் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அந்த கொலையை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. அந்த கொலையைப் பார்த்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்கிற உளவியல் ரீதியான விஷயத்தை இதில் காட்சிப்படுத்தியிருக்கேன்.
இது ஐந்து கதாபாத்திரங்களை சுற்றி நடக்கிற கதை. என்னுடைய படங்களில் உண்மைச் சம்பவம் கலந்திருக்கும். இதிலும் அது இருக்கு.
இதுல விதார்த் கிரெடிட் கார்டு யூஸ் பண்றவங்ககிட்ட பணம் வசூலிக்கிற ஆளாக வர்றார். அவர்தான் படத்தை தயாரிச்சிருக்கார்.
குற்றமே தண்டனை தலைப்பு...?
குற்றமும் தண்டனையும் நாவல் எனக்குப் பிடிக்கும். குற்றமும் தண்டனையும்னு சொல்றதே ஒரு கேட்சிங்கா இருக்கும். அதனால அதையே பெயரா வச்சேன். படத்தைப் பார்த்த இளையராஜா சார், குற்றமே தண்டனை இதுக்கு சரியா இருக்கும்னு சொல்ல, உடனே சரின்னுட்டேன்.
என்னுடைய படங்களை நான் அதிக செலவுல எடுக்கிறது இல்ல. அதனால தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படாதுன்னு நம்பறேன்.
கேரக்டருக்கு பொருந்தாம பாடல்கள் வைக்கிறது எனக்குப் பிடிக்காது. அதனால பாடல்கள் இல்லாமலே படத்தை எடுத்திருக்கேன்.
இளையராஜா சாரை பத்தி நிறைய சொன்னாங்க, அவர் எதையும் மாத்த மாட்டார், நாம சொல்றதை கேட்க மாட்டார்னு. ஆனா, நான் எதையும் நேர்ல அனுபவப்பட்டு தெரிஞ்சுக்கதான் விரும்புவேன். அதுதான் சரியா இருக்கும். அப்படித்தான் இளையராஜாவை சந்திச்சேன். ஒவ்வொரு சீனுக்கும் பின்னணி இசை அமைச்சிட்டு, எப்படியிருக்கு, நல்லாயிருக்கான்னு கேட்பார். இந்த த்ரில்லருக்கு அவர் சிறப்பான இசையை தந்திருக்கார்.