பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், "பெங்களூர் ரசிகர்கள் மிகவும் மோசமானவர்கள்" என கடந்த 2024 ஆம் ஆண்டு சிஎஸ்கே ரசிகர் ஒருவர் பதிவு செய்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி, ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதையடுத்து, "ஆர்சிபி ரசிகர்கள் மோசமாக நடந்து கொண்டதாக சிஎஸ்கே ரசிகர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
"இன்று பெங்களூரில் சிஎஸ்கே அணியை ஆதரித்தவர்களுக்கு நன்றியை. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டை அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். பெங்களூர் ரசிகர்கள், சிஎஸ்கே ரசிகர்களின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடந்ததை கண்டு வெட்கமாக இருக்கிறது. இது நாங்கள் அறிந்த பெங்களூர் அல்ல. நீங்கள் உள்ளூர் ரசிகர்களாக இல்லையெனில், பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் பெண்கள் பாதுகாப்பாக ஐபிஎல் போட்டியை பார்க்க முடியாது. பாதுகாப்பு மற்றும் ரசிகர்களின் நடத்தை மிகவும் மோசமாக இருந்தது," என்று அவர் பதிவு செய்திருந்தார்.
ஆனால், இந்த பதிவுக்கு "சிஎஸ்கே தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தியால் பேசுகிறீர்கள்" என்பது போன்ற கிண்டலான கருத்துகள் வந்தன.
இப்போது அந்த ட்வீட் மீண்டும் வைரல் ஆகி வருகிறது. "பெங்களூர் ரசிகர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை இப்போது தெரிந்து விட்டதா? 11 பேர் உயிரிழப்பதற்கு ரசிகர்களின் பொறுப்பின்மைதான் காரணம்," என ஏராளமான கருத்துகள் பதிவாகி வருகின்றன. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.