Publish Date: Fri, 15 Nov 2019 (16:14 IST)
Updated Date: Fri, 15 Nov 2019 (16:15 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டைச் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வங்கதேச அணி டி 20 தொடரை முடித்துவிட்டு இப்போது டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணித் தலைவர் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த வங்கதேச வீரர்கள் ரன்களையும் சேர்க்க முடியாமல் விக்கெட்களையும் காப்பாற்ற முடியாமல் தடுமாறினர்.
அந்த அணியின் முஷ்புஹீர் ரஹிம் (43), மற்றும் கேப்டன் மோனிமல் ஹாக் (37) ஆகியோர் மட்டுமே சிறிதுநேரம் தாக்குப்பிடித்தனர். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆக அந்த அணி ஒருநாள் கூட நிலைக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், முகமது ஷமி 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.
அதன் பின்னர் ஆடிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 6 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்ற புஜாரா அரைசதம் அடித்து அவ்ட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய கேப்டன் கோஹ்லி டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் சதமடித்து ரஹானேவுடன் சேர்ந்து ரன்களைக் குவித்தார். ஒரு கட்டத்தில் ரஹானே 86 ரன்களில் அவுட் ஆக மயங்க் அகர்வால் தனது இரண்டாவது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்தார். தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 390 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்துள்ளது.