Publish Date: Sat, 27 Jul 2019 (13:12 IST)
Updated Date: Sat, 27 Jul 2019 (13:13 IST)
இந்திய அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் வசம் ஒப்படைத்துள்ளது பிசிசிஐ.
இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவி காலம் உலகக்கோப்பை போட்டியோடு முடிந்துவிட்டது. இருப்பினும் அடுத்த மாதம் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக அவர்களது பதவி காலம் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பதவி நீட்டிக்கப்பட்டாலும் புதிய பயிற்சியாளர் தேர்விற்கான விளம்பரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதற்கான தகுதிகளையும் விவரித்துள்ளது.
இந்நிலையில் இந்த பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தலைமையிலான குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கபில்தேவ் தலைமையிலான குழுவில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் அன்ஷூமான் கெய்க்வாட், பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கான பயிற்சியாளரைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த குழுதான் தேர்வு செய்தது. ஆகஸ்டு மாத இறுதியில் பயிற்சியாளருக்கான நேர்காணல் நடக்கும் என தெரிகிறது.