இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சியில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். மேலும், ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகிய இருவரும் அரை சதம் அடித்தனர்.
350 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி, முதல் மூன்று விக்கெட்டுகளை 11 ரன்களில் இழந்து விட்டதால், நிச்சயம் தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாத்யூ 72 ரன்கள் மற்றும் மார்கோ ஜேன்சன் 70 ரன்கள் அடித்து சவாலாக விளையாடினர்.
இவர்கள் இருவரையும் ஒரே ஓவரில் குல்தீப் யாதவ் வீழ்த்திய பிறகு, போட்டி மீண்டும் இந்தியா பக்கம் திரும்பியது. இருப்பினும், கார்பின் போஸ்ச் அபாரமாக விளையாடி 67 ரன்கள் அடித்து மீண்டும் இந்திய அணிக்கு பயத்தை காட்டினார்.
இறுதியில், தென்னாப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தபோது, பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கடைசி பேட்ஸ்மேன் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
தென்ஆப்பிரிக்க அணி இலக்கை நெருங்கி பயமுறுத்தியதால், ஆட்டம் இறுதிவரை பரபரப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.