முன்னாள் பாகிஸ்தான் பயிற்சியாளராக இருந்த ஜேசன் கிளெஸ்பி, தனக்கு சம்பளம் வழங்கவில்லை என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக சேர்ந்த ஜேசன் கிளெஸ்பி சில நாட்களிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்பே பதவியை விட்டு விலகினார்.
ஆனால் தனக்குரிய சம்பளம், போனஸ் உள்ளிட்ட பணம் கிடைக்கவில்லை என கிளெஸ்பி புகார் அளித்துள்ளார். பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி, மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றிக்கான போனஸும், சம்பளமும் வாரியம் வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அவர் எடுத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ICCக்கு இதுபோன்ற விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் உள்ளதா என்பது உறுதியாகவில்லை.
இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முற்றிலுமாக மறுத்துள்ளது. “முன்னாள் தலைமை பயிற்சியாளர் நான்கு மாதங்களுக்கான நோட்டிஸ் காலத்தை பின்பற்றாமல் திடீரென பதவியிலிருந்து விலகியுள்ளார். இது அவரது ஒப்பந்த விதிகளை மீறுவது ஆகும், எனவே தான் அவரது சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கான புதிய பயிற்சியாளரை கிரிக்கெட் போர்டு தேடி வருகிறது. இடைக்கால பயிற்சியாளராக தற்போது ஆக்கிப் ஜாவெட் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.