Publish Date: Fri, 08 Mar 2019 (15:47 IST)
Updated Date: Fri, 08 Mar 2019 (15:48 IST)
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்சும் உஸ்மான் கவாஜாவும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இன்று மூன்றாவது போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்னும் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். களமிறங்கிய ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் சிறப்பாக விளையாடினர். அவர்களின் விக்கெட்டைக் கைப்பற்ற முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இருவரும் அணியின் ரன்ரேட் ஓவருக்கு 6 ரன்களுக்கு குறையாமல் பார்த்துக்கொண்டனர். இருவரும் சதத்தை நெருங்கிய வேளையில் அந்த அணியின் கேப்டன் பிஞ்ச் 93 ரன்களில் குல்தீப் பந்தில் அவுட் ஆகி சதத்தைத் தவறவிட்டார்.
அதன் பின்னர் மேக்ஸ்வெல் களமிறங்கி 2 ரன்களோடு விளையாடி வருகிறார். கவாஜா 92 ரன்களோடு தனது முதல் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அணி 34 ஓவர்களில் 192 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து தொடர்ந்து ஆடி வருகிறது.