சினி பாப்கார்ன் - பைரவா, சி 3 ஓபனிங் ஓர் ஒப்பீடு
, திங்கள், 13 பிப்ரவரி 2017 (16:17 IST)
விஜய்யின் தங்கமழை: பைரவா வெளியாகும் முன்பு பத்திரிகையாளர்களை அழைத்த விஜய், கேள்வி எதுவும் கேட்கக் கூடாது, இது ப்ரெண்ட்லியான மீட்டிங் என்று கூறி பத்திரிகையாளர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார். விளம்பரப்படுத்தும் அவர்களுக்கே அப்படியென்றால், பைரவா படத்துக்கு உழைத்தவர்களுக்கு? தங்க செயின், தங்க மோதிரம் என்று பரிசளித்து அசத்தினார்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய் படத்தில் நடிக்கும் போதுதான் இப்படியான பரிசுகள் கிடைக்கிறது என்கிறார்கள் தொழிலாளர்கள். உண்மையா மக்களே...?
தமிழ் ராக்கர்ஸுக்கு பூட்டு
செய்யிறது திருட்டு வேலை. இதில் தெனவெட்டாக சவால்விட்டால் என்னாகும்? தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தைதான் சொல்கிறோம். இன்றைய தேதியில் சூர்யாவா, தமிழ் ராக்கர்சா என்று போட்டி வைத்தால் பன்னீர் மாதிரி பல மடங்கு ஆதரவுடன் தமிழ் ராக்கர்ஸ் வெற்றி பெறும். அவ்வளவு பேர் அதில் படம் பார்க்கிறார்கள். சி 3 படத்தை வெளியான அன்றே இணையத்தில் வெளியிடுவோம் என்று அவர்களும், செய்துபாரு, உனக்கு ஜெயில்தான் என்று ஞானவேல்ராஜாவும் பரஸ்பரம் தொடை தட்டினர். முதல் ரவுண்டில் தமிழ் ராக்கர்ஸ் வெற்றி பெற்றது போல் தெரிந்தாலும், அதன் இணையதளத்தை முடக்கி சி 3 அணி வெற்றியை தட்டிப் பறித்திருக்கிறது.
அம்மான்னா... சே, சிங்கம்னா சும்மாவா.
இதுதான் ஊர் பாசமாய்யா?
இடி விழுந்தாலும் ஏன்னு எட்டிப் பார்க்காத சில தலைகள் சசிகலா, பன்னீர் செல்வம் போர்க்களத்தில் கொடி பிடித்து ஆதரவு அளிப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. தானுண்டு தன்னோட சைக்கா படங்களுண்டு என்றிருந்த பாலா பன்னீர் செல்வத்த அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஏன்னு கேட்டால் இரண்டு பேரும் ஒரே ஊராம். இது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால், சசிகலா, பன்னீர் சண்டை பாலாவையே ஒரு தரப்பை ஆதரிக்க வைத்திருக்கிறதே...
தமிழ்நாட்ல என்னப்பா நடக்குது...?
பைரவா, சி 3 ஓபனிங் ஓர் ஒப்பீடு
விஜய் ரசிகர்கள் கூல்டவுண். ரஜினிக்கு அப்புறம் சூர்யாவுக்குதான் பிசினஸ் என்று சி 3 தயாரிப்பு தரப்பு பேசியதும் அஜித் ரசிகர்களைவிட விஜய் ரசிகர்களுக்குதான் மூக்கு வியர்த்து கண் சிவந்தது. இருக்காதே பின்னே... எத்தனை வருஷமா இளைய தளபதியை அடுத்த சூப்பர் ஸ்டாராக்க முயன்று வருகிறார்கள்.
சி 3 - பைரவா படங்களின் ஓபனிங்கை ஒப்பிட்டால் விஜய்தான் ரொம்பவும் முன்னால் இருக்கிறார். ஜனவரி 11 வியாழக்கிழமை வெளியான பைரவா முதல் 4 தினங்களில் 3.09 கோடிகளை வசூலித்தது. பிப்ரவரி 9 வியாழன் வெளியான சி 3 அதே நான்கு தினங்களில் 2.16 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது. பைரவா வெளியானது பொங்கல் பண்டிகையின் போது என்று சமாதானம் சொன்னாலும், வசூல் வித்தியாசம் எக்கச்சக்கம். சி 3 பொங்கலுக்கு வெளியாகியிருந்தாலும் 3 கோடியை தாண்டியிருக்குமா என்பது சந்தேகம்.
பைரவா இதுவரை சென்னையில் 7 கோடியை வசூலித்துள்ளது. இந்த வசூலை எட்ட சி 3-க்கு நிறைய தண்ணி குடிக்க வேண்டிவரும்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், சி 3 பரவாயில்லை நல்ல என்டர்டெய்னர் என்று பெயர் வாங்கியிருக்கிறது. பைரவா போலிருந்தால் அதன்கதி அதோகதிதான். அஞ்சான் போன்ற படங்களில் சூர்யா நடித்தால் படுதோல்வி உறுதி. ஆனால், அதே அஞ்சான் ரேஞ்சில் இருக்கும் பைரவாவில் விஜய் நடித்தால் படம் சூப்பர்ஹிட்.
இதுதான் ஸ்டாருக்கும், ஹீரோவுக்கும் உள்ள வித்தியாசம். விஜய் ஸ்டார், சூர்யா ஹீரோ.
அடுத்த கட்டுரையில்