Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள், பரிகாரங்கள்! – மகரம்!

GuruPeyarchi 2024

Prasanth Karthick

, சனி, 27 ஏப்ரல் 2024 (08:41 IST)
எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின்  மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமான க்காரியங்களை செய்ய மாட்டீர்கள்.


 
இந்த குருப் பெயர்ச்சியில் உங்களின் செய்தொழிலில் நல்ல  முன்னேற்றம் ஏற்படும். செல்வ வளம் பெருகும். உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் பெயரும், புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். அனைவரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வீர்கள்.

பெரியோரிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். உங்களின் எண்ணங்களில் ஏற்பட்ட தடுமாற்றம் நீங்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உங்களின் தேகத்தில் புதிய பொலிவு உண்டாகும்.

உங்களின் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். விலகிச் சென்றிருந்த உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். வருமானம் இரட்டிப்பாகும். பழைய கடன்களை வட்டியும் முதலுமாக திருப்பிச் செலுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் பாகப்பிரினை உண்டாகி உங்களுக்கு உரிய பங்கு கிடைத்துவிடும். அதோடு கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றி புகழடையும் காலகட்டம் இதுவென்றால் மிகையில்லை.

ஜுலை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரையில் உள்ள காலகட்டத்தில் நண்பர்களுடன் இணக்கமாகச் செயல்படுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயங்களை நண்பர்கள் மறந்து விடுவார்கள். அதேநேரம் சில அனாவசிய செலவுகளையும் செய்ய நேரிடும். குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றை பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத் தீர்த்துக் கொள்வீர்கள். உங்களுக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் நஷ்டங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்வீர்கள்.

குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செய்தொழிலில் மாற்றம் செய்ய  நினைக்கும்போது முன் கூட்டியே கூட்டாளிகளுடன் விவாதித்து சுமுகமான நிலைமையை ஏற்படுத்திக்கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருந்தாலும் அவ்வப்போது உஷ்ணம் சம்பந்தமான உபாதைகளுக்கு ஆளாவீர்கள். எனவே கவனம் தேவை. நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை நடுநிலையோடு இருந்து தீர்ப்பீர்கள். அதோடு தீயோரின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. இதனால் தேவையற்ற சூழ்நிலைகளையும் தவிர்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களின் பெயரில் பணம் வாங்கித் தரவும் வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உங்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்துகொள்வார்கள். உங்களுக்கு சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது.

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். சில நேரங்களில் கடும்போட்டிகளை சந்திக்க நேரிடும். இதனால் மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டிவரும். எதிலும் விழிப்புடன் இருப்பது நல்லது. நன்கு ஆலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். கால்நடைகளால் நன்மைகள் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். நெல் விளைச்சல் சாதகமாக இருக்கும்.

webdunia

 
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும். சச்சரவுகள் ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் பலனடைவீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். சக கலைஞர்களும் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள்.

மாணவமணிகள் கல்வியிலும் உள்ளரங்கு விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சி தேவை.

உத்திராடம்:
இந்த குருப் பெயர்ச்சியில் வேலை இல்லாமல்  இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டமிது. பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில்  அதிக வருவாய் கிடைக்கும்.

திருவோணம்:
இந்த குருப் பெயர்ச்சியில் தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்துதான் கோரிக்கைகள் நிறைவேறும். புதிய  ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

அவிட்டம்:
இந்த குருப் பெயர்ச்சியில் பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். தொழிலில் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.

 
பரிகாரம் : சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும். சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு  பொன்னான காலம் கனிந்து வரும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு
அதிர்ஷ்ட கல்: நீலக்கல், கார்னெட்
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீசிவன், ஸ்ரீஆஞ்சநேயர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – தனுசு!