Publish Date: Wed, 07 Mar 2018 (17:09 IST)
Updated Date: Wed, 07 Mar 2018 (17:13 IST)
தமிழகத்தில் நேற்றில் இருந்தே பெரியார் சிலை உடைப்பு குறித்த சர்ச்சைக்குரிய விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றது. எச்.ராஜாவின் கருத்து எந்த அளவுக்கு ஏற்றுக்க்கொள்ள முடியாத கருத்தோ, அந்த அளவுக்கு இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்து வரும் அரசியல் கட்சி தலைவர்களின் அறிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளது. கையை உடைப்பேன், காலை உடைப்பேன் என்று பழம்பெரும் அரசியல் தலைவர் வைகோ உள்பட பலர் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பெரியார் சிலை விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறும் சிலர் இன்று காலை சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் இருந்தவர்களின் பூணூல்களை அறுக்கும் நிகழ்ச்சியும் நடந்தேறியது. இதுகுறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை என்றாலும் ஊடகங்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் இதுகுறித்து போலிசார் விசாரணை செய்தனர்.
சம்பவம் நடந்த மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் குறித்து ஆய்வுசெய்து பூணூலை அறுத்தவர்களை போலீசார் அடையாளம் கண்டுகொண்டனர். இந்த நிலையில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர், ராயப்பேட்டை காவல்நிலையத்தில் சரணடைந்து தாங்கள் தான் பூணூலை அறுத்தவர்கள் என்று கூறியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.