பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் கட்சிக்கு கட்டுப்படாதவர்கள் நீக்கப்படுவார்கள் என வெளிப்படையான எச்சரிக்கையை விடுத்துள்ளார் ராமதாஸ்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெரியவர் ராமதாஸ் தைலாப்புரத்தில் செயற்குழு கூட்டம் நடத்த போட்டிக்கு, சின்னவர் அன்புமணி பனையூரில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்த போக மோதல் அதிகமாகியுள்ளது.
நாளை பாமக சார்பில் தமிழ்நாடு முழுவதும் அன்புமணி சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், கட்சியின் அனுமதியின்று அன்புமணி இந்த முடிவை எடுத்திருப்பதால் அவர் கட்சியின் கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி மனு அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ராமதாஸ்.
அதை தொடர்ந்து தற்போது அன்புமணியை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ள ராமதாஸ் “பாமக கௌரவ தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக அன்புமணி என பொறுப்புகள் வழங்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பொறுப்புகளுக்கு யாராவது நான் தான் என கூறி பவனி வந்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். பனையூரில் பாமக தலைமையகம் இருப்பதாக சொல்வது, தாங்களாகவே நிர்வாகிகளை நியமனம் செய்து கொள்வது போன்றவை சட்டவிரோதமானவை. கட்சி தலைமைக்கு கட்டுப்படாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்” என எச்சரித்துள்ளார்.
Edit by Prasanth.K