Publish Date: Sat, 13 Jan 2018 (14:30 IST)
Updated Date: Sat, 13 Jan 2018 (14:32 IST)
முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதில் இருந்து அதிமுக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனையடுத்து தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் அதிமுகவில் குறிப்பிட்ட தரப்பினர் தினகரனுக்கு ஆதரவாகவே உள்ளனர். இரட்டை இலையையும், கட்சியையும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் கைப்பற்றியதை அடுத்து தினகரன் புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல்கள் பரவின. ஆனால் தினகரன் அதிமுக இருக்கும் போது எதற்கு புதிய கட்சி என பதிலளித்தார்.
ஆனால் நேற்று சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த தினகரனிடம் செய்தியாளர்கள் புதிய கட்சி தொடங்கும் எண்ணம் உள்ளதா? என மீண்டும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தினகரன் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
மேலும், தொண்டர்கள், நிர்வாகிகள் என ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் எங்களுடன் இருக்கிறார்கள். இளைஞர்கள் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்களோடு சேர அனுமதி கேட்கின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வோம். இது தொடர்பாக சசிகலாவிடம் அனுமதி கேட்டதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார் என தினகரன் கூறினார்.