Publish Date: Fri, 12 Jun 2020 (07:04 IST)
Updated Date: Fri, 12 Jun 2020 (07:07 IST)
கொரோனா பரிசோதனை செய்தாலே தனிமைப்படுத்துதல் ஏன்?
கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் ஏன்? என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பரிசோதனை செய்தாலே பரிசோதனை செய்யப்பட்டவரும், அவர்களுடைய குடும்பத்தினர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என சென்னை மாநகராட்சி நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்கள் அச்சம் கொள்வார்கள் என்று பரவலாக பேசப்பட்டது
இந்த நிலையில் இதுகுறித்து கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துக் கூறியதாவது: சென்னையில் பரிசோதனை செய்யும் தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவர் என்கிற உத்தரவு சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையே, மக்களை பயமுறுத்தும் நோக்கமல்ல.
சென்னையில் அதிகமான ஆய்வகங்கள் உள்ளன. அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஏற்கனவே, மற்ற மாவட்டங்கள் / மாநிலங்கள் போன்றவற்றிலிருந்து வருபவர்களை சோதனை இல்லாமல் தனிமைப்படுத்தி வருகிறோம். இது பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கம் மட்டுமே. இந்த நடவடிக்கை மூலம் பரவலை வெகுவாக கட்டுப்படுத்தலாம்” கொரோனா தொற்று பரிசோதனை செய்த பின்னர் முடிவுகள் வரும் இரண்டு நாட்களுக்குள் தொற்று பாதித்து உள்ள நபர் மூலம் பலருக்கும் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த விதமான பரவலை தடுக்கும் நோக்கத்தில் தான் சென்னை மாநகராட்சி இம்முடிவை எடுத்துள்ளது என்றார்.