Publish Date: Wed, 05 Sep 2018 (14:48 IST)
Updated Date: Wed, 05 Sep 2018 (14:57 IST)
பேரணியில் கலந்து கொண்ட அனைவரையும் கட்சியில் இருந்து நீக்க முடியுமா என அழகிரி ஆவேசமாக பேசியுள்ளார்.
திமுக தலைவா் கருணாநிதி உயிருடன் இருந்த போதே ஸ்டாலின் தலைமையை ஏற்க விரும்பாத அழகிரி தன் சகோதரரை தலைவராகவும் ஏற்றுக் கொள்ள விரும்பவி்ல்லை என்று கடந்த 2014 ல் கூறிய பின்பு அப்போதே அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து கட்சி தலைமை நீக்கி உத்தரவிட்டது.
இது நடந்து முடிந்து சில ஆண்டுகள் கடந்த பின் சென்ற மாதம் கலைஞரின் இறப்புக்குப் பிறகு தி,மு.க கட்சி உடையுமோ என்று பேசப்பட்ட நிலையில் ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத் தயார் என்று மு.க.அழகிரி சொன்னபிறகும் கூட அவரைக் கட்சியில் திரும்ப சோ்த்துக் சொள்ள தி.மு.க தலைவா் ஸ்டாலின் தயாராக இல்லை என்று தற்போது நடக்கும் அரசியல் சூழல்களிலிருந்து தெரிகிறது.
அரசியல் பலத்தை நிரூபிப்பதற்காக தன் ஆதரவாளா்களுடன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திலிருந்து மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் வரைக்கும் அமைதிப் பேரணி நடத்த ஏற்பாடு செய்தார் அழகிரி.
இந்நிலையில் அழகிரியை செவ்வாய்கிழமை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற திமுக நிர்வாகி ரவி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று அழகிரி தலைமையில் கருணாநிதியின் சமாதி நோக்கி அமைதிப்பேரணி நடைபெற்றது. பேரணி முடிந்த பின் அழகிரி செய்தியாளா்களுக்குப் பேட்டி அளிக்கையில், கலைஞருக்கு மரியாதை செலுத்தவே இந்த பேரணி நடத்தப்பட்டது. வேறு நோக்கம் கிடையாது. பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
பின் திமுக செயலாளர் ரவி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்த பேரணியில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் எல்லோரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா என கோபமாக கேள்வி எழுப்பினார்.
பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என அழகிரி நம்பிக்கையுடன் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால் பேரணியில் வெறும் 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.