Publish Date: Wed, 05 Sep 2018 (13:20 IST)
Updated Date: Wed, 05 Sep 2018 (13:23 IST)
மதுராந்தகம் அருகே தலைமை ஆசிரியர் ஒருவர் 5ஆம் வகுப்பு மாணவனின் கையை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் மலைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஜீவரத்தினம். அரசுப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவன் தனது இடது கையை பிடித்தவாறு வீட்டில் அழுது கொண்டிருந்தான்.
வீட்டிற்கு வந்த பெற்றோர் ஏன் இப்படி கையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க என கேட்ட போது, வீட்டுப்பாடம் முடிக்காததால் தலைமை ஆசிரியர் பிரம்பால் அடித்து உதைத்ததாகவும், இதில் தனது கையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தான்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றனர். சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், அவனுக்கு கையில் முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் தங்கள் பிள்ளையின் கையை அடித்து உடைத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.