மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய பாஜக அரசு நிராகரித்ததாக கூறப்படும் விவகாரத்தில், மதுரையின் வளர்ச்சிக்கு எதிராக உள்ள தடைகளை தகர்த்தெறிவோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து முதல்வர் தனது 'எக்ஸ்' பக்கத்தில், "எய்ம்ஸும் வராது, மெட்ரோ ரயிலும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடர்வோம்" என்று பதிவிட்டார்.
அவருடைய எக்ஸ் பதிவு இதோ:
AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்...
அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்!
மக்கள்தொகை குறைவாக இருப்பதாக கூறி இத்திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து முதல்வர் இவ்வாறு குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும், பாஜக தரப்பில், திட்ட அறிக்கைகள் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டதாகவும், திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.