Publish Date: Wed, 27 May 2020 (20:54 IST)
Updated Date: Wed, 27 May 2020 (21:00 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற முதல்வர் கே. பழனிசாமி சட்டசபையில் சமீபத்தில் அறிவித்தார் என்பதும் அதனையடுத்து இதற்கு தமிழ் வளர்ச்சித்துறை ஒப்புதல் அளித்தது என்பதும் தெரிந்ததே. இதனை தொடர்ந்து ஜெயலலிதா இல்லம், அவரது அசையும் சொத்துக்களை தற்காலிகமாக அரசுடைமையாக்கி, வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆளுநர் அவசர சட்டத்தைப் பிறப்பித்தார்.
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கின் விசாரணையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி சற்றுமுன்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுகுறித்து கூறியபோது, ‘மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம் என்றும், மீதமுள்ள வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அலுவலகமாக மாற்றலாம் என்றும் பரிந்துரை செய்தனர்.
மேலும் ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு என்றும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா, தீபக்கை சொத்துக்களின் 2ஆம் நிலை வாரிசுகளாக அறிவிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஜெ.தீபக்கிடம் போயஸ் கார்டன் இல்லம் , ஜெயலலிதாவின் மற்ற சொத்துகளுக்கும் உரிமை கோருவீர்களா என அவரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த தீபக், நானும் எனது அக்காவும் எங்களது பரம்பரை சொத்துகளுக்கு மட்டும் தான் உருமை கோரினோம். இன்று வந்துள்ள உயர் நீதிமன்ற குறித்து அக்காவுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.