Publish Date: Fri, 28 Dec 2018 (16:19 IST)
Updated Date: Fri, 28 Dec 2018 (16:23 IST)
ஊதிய முரண்பாடு குறித்து போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் கேப்டனின் மகன் விஜயபிரபாகரன். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கும் பேட்டி அளித்தார்.
பேட்டியில் அவர் கூறியது பின்வருமாறு, ஆசிரியர்களின் சம்பளம் குறித்த கோரிக்கையை நிறைவேற்றினால் அவர்கள் வரும் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். ஆசிரியர்களின் போராட்டம் திமுக, அதிமுக இரு ஆட்சிக்காலத்திலும் மாறிமாறி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இவை அனைத்தையும் நான் சிறுவயதிலிருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன். இதனைப் பார்த்து பார்த்து நமக்கு பழகிவிட்டது. திமுக வந்தாலும் இந்த நிலைமை மாறப்போவதில்லை. ஹைதராபாத் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், தமிழகம் அப்படியே இருக்கிறது. கல்வியில் 2-3 ஆம் இடத்திலேயே உள்ளது என தெரிவித்தார்.
மேலும், ஆசிரியர்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர் கோரிக்கைகள் குறித்து தேமுதிக சார்பில் எடுத்துரைக்கப்படும் எனவும், தேமுதிக தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் எனவும் தெரிவித்தார்.
கேப்டன் இல்லாத இடத்தையும் அவரின் இடத்தில் இருந்து செய்ய வேண்டிய செயல்களையும் விஜயபிரபாகரன் செய்து வருகிறார். இது தேமுதிகவினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.