நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட 'தமிழக வெற்றிக் கழகம்' தலைவர் விஜய், அந்த மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்னைகளை பட்டியலிட்டு, திமுக அரசுக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பினார்.
மீன் ஏற்றுமதியில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாவட்டமான நாகப்பட்டினத்தில், மீன்களைப் பதப்படுத்தும் நவீன தொழிற்சாலைகள் இல்லை.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை சுட்டிக்காட்டிய விஜய், இந்த விவகாரத்தில் வெறும் கடிதங்களை மட்டும் அனுப்பும் கபட நாடக திமுக அரசு போல் நாங்கள் இல்லை என்றும், மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தேவை என்றும் வலியுறுத்தினார்.
மண் வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும் என்றும், கடலோர பகுதிகளில் மண் அரிப்பைத் தடுக்கும் அலையாத்தி காடுகளின் அழிவை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
காவிரி நீர் பிரச்னை, கடல்சார் கல்லூரி நிறுவுதல், மீன் சார்ந்த தொழிற்சாலைகள் அமைத்தல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், மற்றும் உப்பு ஏற்றுமதிக்கு வழிவகை செய்தல் போன்ற முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர் பேசினார்.
நாகூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலை, நாகை பேருந்து மற்றும் ரயில் நிலையங்களின் மோசமான பராமரிப்பு, மேலகோட்டை மேம்பாலம் மற்றும் தஞ்சாவூர்-நாகை சாலைப் பணிகள் தாமதம், மற்றும் மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் சேதமடைவது போன்ற உள்ளூர் பிரச்னைகளையும் விஜய் சுட்டிக்காட்டினார்.
சாதனைகளுக்கு எல்லாம் எங்கள் ஆட்சிதான் சாட்சி என்று அவர்கள் பேசி பேசி எங்கள் காதில் ரத்தம் வந்ததுதான் மிச்சம். இவர்கள் ஆட்சி செய்தது போதாதா? சொந்த குடும்பத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்திய முதல்வர், மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க காவிரி நீரை கொண்டு வந்தாரா?
தான் முன்பு, 2011ஆம் ஆண்டிலிருந்தே மீனவர்களுக்காகவும், இலங்கை தமிழர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.