அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிகள் தவிர்த்து, நடிகர் விஜய் தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைய இருப்பதாகவும், இந்த கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த கூட்டணியில் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி மற்றும் 40 தொகுதிகள் வழங்கப்படும் என்றும், இந்த கூட்டணி குறித்த ஒப்பந்தம் பேசப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஒருவேளை தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறினால், பா.ம.க.வை உள்ளிழுக்க தி.மு.க. திட்டமிட்டிருப்பதாகவும், அதனால்தான் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, டாக்டர் ராமதாஸ் அவர்களை சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பா.ம.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் வெளியேறியவுடன் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பிடித்துவிடும் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர வாய்ப்பு இருப்பதாகவும், தே.மு.தி.க.விடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, வரும் தேர்தலில் மூன்று கூட்டணிகளுமே சம அளவில் வலுவாக இருக்கும் என்று கூறப்படுவது தொங்கு சட்டசபைக்கு வழிவகுக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.