Publish Date: Fri, 21 Sep 2018 (16:02 IST)
Updated Date: Fri, 21 Sep 2018 (16:09 IST)
வீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தந்தை விஜயகுமார் போலீசார் மூலம் மிரட்டி, அடித்து விரட்டி விட்டதாக வனிதா பேட்டியளித்துள்ளார்.
சென்னை மதுரவாயலில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு எடுத்த தனது மகள் வனிதா, காலி செய்ய மறுப்பதாக நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் வனிதா விஜயகுமாரை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றினர். மேலும், அவரோடு அங்கு தங்கியிருந்த 8 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வனிதா “ நான் தற்போது டாடி என்கிற படத்தை இயக்கி வருகிறேன். அதற்கான படப்பிடிப்புகள் இந்த வீட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால், என் தந்தை வேறு யாருக்கோ வீட்டை கொடுப்பதற்காக என்ன காலி செய்ய சொன்னார். நான் மறுக்கவே எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இது தொடர்பாக நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
ஆனால், வழக்கு நீண்ட காலம் இழுக்கும் என பயந்து, என் தந்தை விஜயகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்து என்னை வெளியே விரட்டியுள்ளார். என்னிடம் தவறாக பேசி மதுரவாயல் இன்ஸ்பெக்டர் என் கன்னத்தில் அறைந்தார். நான் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதுதான் இந்த வீடு கட்டப்பட்டது. இதில் என் பணமும் இருக்கிறது. இந்த வீட்டில் இருந்தால் என் தாயுடன் இருப்பது போல் இருக்கிறது. அதனால்தான் இங்கு தங்கியிருந்தேன். என்னை அடித்ததற்கு போலீஸ் பதில் சொல்ல வேண்டும்” என அவர் ஆவேசமாக பேசினார்.