Publish Date: Thu, 18 Jan 2018 (13:15 IST)
Updated Date: Thu, 18 Jan 2018 (13:18 IST)
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்பதை நாமும் பார்ப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். அதேபோல், வருகிற பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினம் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோ, செய்தியாளர்களிடம் பேசிய போது “நான் பல வருடங்களாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன். மக்களின் மனதை நன்றாக அறிவேன். கமலும், ரஜினியும் ஏதோ திடீர் புரட்சி செய்து தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். அப்படி அவர்கள் எனன் செய்ய போகிறார்கள் என்பதை காலம் முடிவு செய்யும்” என கிண்டலாக பதிலளித்தார்.
பொதுவாக, யாராவது புதிதாக கட்சி தொடங்கினால் வைகோ வலிய சென்று ஆதரிப்பார் என சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வரும் நிலையில், ரஜினி, கமலை கிண்டலடிக்கும் விதமாக வைகோ கருத்து கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.