Publish Date: Mon, 12 Mar 2018 (17:19 IST)
Updated Date: Mon, 12 Mar 2018 (17:50 IST)
திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வலர் காமராஜால் எட்டி உதைக்கப்பட்டு மரணமடைந்த உஷா கர்ப்பிணி இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
திருச்சியில் கடந்த 7ம் தேதி, தனது மனைவி உஷாவுடன் இருசக்கர வானகத்தில் சென்ற ராஜா என்பவரை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டி சென்று எட்டி உதைத்ததில் ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவர் உஷா அப்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார் என ராஜா கூற, இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, பின் போலீசாரால் அடித்து விரட்டப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இடை நீக்கம் செய்யப்பட்டார். சமூக வலைத்தளங்களில் காமராஜுக்கும், காவல் துறைக்கும் எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், உஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த சரவணன் என்கிற மருத்துவர் அதன் அறிக்கையை காவல் துறையினரிடம் அளித்துள்ளார். அதில், உஷா கர்ப்பிணி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என திருச்சியை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி கூறியுள்ளார்.
இந்த விவகாரம் உஷா வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.