Publish Date: Fri, 06 May 2022 (08:38 IST)
Updated Date: Fri, 06 May 2022 (08:41 IST)
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் தீர்மானங்களையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இதுதொடர்பாக பொருளாதார தடை உள்ளிட்டவை விதிக்கப்பட்டாலும் வட கொரியா தனது ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, ”வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் 'பாலிஸ்டிக்' ஏவுகணை திட்டமும், அணு ஆயுத திட்டங்களும் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்ற பேச்சுவார்த்தைக்கு வடகொரியாவுக்கு அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.