12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வு தொடங்க இருப்பதை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று, அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியுள்ளது. வரும் 14ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்முறை தேர்வு தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று முதல் செய்முறை தேர்வு தொடங்க இருப்பதை அடுத்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவித்துள்ளது.
இன்று முதல் செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம் கிடைக்க வேண்டும் என்றும், மும்முனை இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பராமரிப்பு பணிகளுக்காக ஏப்ரல் 15ஆம் தேதி வரை மின்தடை செய்யக்கூடாது என்றும், மாணவர்கள் படிப்பதற்காக இரவு நேரங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.