Publish Date: Wed, 31 Mar 2021 (12:35 IST)
Updated Date: Wed, 31 Mar 2021 (12:38 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசி வரும் உதயநிதி, பிரதமருக்கு தைரியம் இருந்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைக்கட்டும் என பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் தாராபுரத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, முதல்வர் தாயார் குறித்து ஆ.ராசா பேசியதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், திமுகவில் உதயநிதிக்கு பதவி வழங்குவதற்காக பல முக்கிய நபர்கள் ஒதுக்கப்பட்டதாகவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிரச்சாரத்தில் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் “இந்திய வரலாற்றிலேயே இதுவரை ஒரு பத்திரிக்கை பேட்டி கூட அளிக்காத ஒரே பிரதமர் மோடிதான். உங்களால் முடிந்தால் எங்கள் மக்களை வந்து சந்தியுங்கள் அல்லது 10 பத்திரிக்கையாளர்களையாவது சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்” என சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.