தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு, அரசியல் கூட்டங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "ஒவ்வொரு கூட்டத்தையும் எவ்வளவு தாமதம் செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தை பார்த்து, காவல்துறை தரப்பில் பல்வேறு அறிவுரைகள் கொடுக்கிறோம். குறிப்பாக, விஜய் சரியான நேரத்திற்கு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், "இனி வரும் கூட்டங்களுக்கு சரியான நேரத்திற்கு வருகிறாரா என்பதை செய்தியாளர்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றும்" அவர் கூறினார். காவல்துறை ஒத்துழைப்பு சரியாக கொடுக்கப்பட்டது என்றும், இது குறித்து விசாரணை செய்ய ஒரு நபர் கமிஷன் அமைத்திருக்கிறோம் என்றும், அந்த கமிஷன் அறிக்கையைப் பொறுத்து முதல்வர் சரியான நடவடிக்கை எடுப்பார் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.