Publish Date: Wed, 12 Oct 2022 (10:14 IST)
Updated Date: Wed, 12 Oct 2022 (10:16 IST)
ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள பிரபலமான பாம்பன் பாலத்தில் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பாலத்தின் பக்கவாட்டு கட்டையில் பலமாக மோதியது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அப்பகுதியில் குவிந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பக்கவாட்டு கட்டையில் மோதி கவிழும் நிலையில் இருந்த பேருந்தை கயிறை கட்டி இழுத்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் பாம்பன் பாலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.