Publish Date: Wed, 01 Aug 2018 (17:02 IST)
Updated Date: Wed, 01 Aug 2018 (17:09 IST)
விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அந்த பகுதி திமுக பிரமுகர் யுவராஜ பிரியாணிக்காக சண்டை போட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் எதிரொலித்து வருகிறது.
விருகம்பாக்கம் பகுதியில் செயல்படும் ஒரு உணவகத்திற்கு கடந்த 28ம் தேதி இரவு 10 மணியளவில் 10 பேர் கொண்ட கும்பல் வந்து தங்களுக்கு இலவசமாக பிரியாணி வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால், பிரியாணி தீர்ந்து விட்டதாக கடை ஊழியர்கள் கூற அந்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கி விட்டு சென்றதோடு, கடையின் இருந்த சில பொருட்களை உடைத்துவிட்டும் சென்றுள்ளனர்.
விசாரணையில், விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜே ஊழியர்களை தாக்கியவர் என்பது தெரிய வந்தது. திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தை சாக்காக வைத்து அவர்கள் இதை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், இதை கிண்டலடிக்கும் வகையில் டிவிட்டரில் ‘ஓசி பிரியாணி திமுக’ என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் திமுகவினரை கிண்டலடித்து வருகின்றனர். இதனால், இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருக்கிறது.