Publish Date: Wed, 01 Aug 2018 (16:08 IST)
Updated Date: Wed, 01 Aug 2018 (16:13 IST)
கடையை மூடும் வேளையில் பிரியாணி கேட்டு கடை ஊழியர்களை திமுக பிரமுகர் தாக்கிய விவகாரம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருகம்பாக்கம் பகுதியில் செயல்படும் ஒரு உணவகத்திற்கு கடந்த 28ம் தேதி இரவு 10 மணியளவில் 10 பேர் கொண்ட கும்பல் வந்து தங்களுக்கு பிரியாணி வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால், பிரியாணி தீர்ந்து விட்டதாக கடை ஊழியர்கள் கூற அந்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கி விட்டு சென்றதோடு, கடையின் இருந்த சில பொருட்களை உடைத்துவிட்டும் சென்றுள்ளனர்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது தொடர்பாக கடை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளிக்க, விசாரணையில், விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜே ஊழியர்களை தாக்கியவர் என்பது தெரிய வந்தது. திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தை சாக்காக வைத்து அவர்கள் இதை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதனையடுத்து, யுவராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், யுவராஜும், அவரின் உடன் வந்தவர்களும் தலைமறைவாகி விட்டடனர்.
இந்த விவகாரம் விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.