Publish Date: Fri, 05 Oct 2018 (12:19 IST)
Updated Date: Fri, 05 Oct 2018 (12:22 IST)
அமமுகவை அதிமுகவுடன் இணைக்க தினகரன் தூதுவிட்டார் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ள் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில்,தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தினகரனின் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், 'எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என துணை முதல்வர் ஓபிஎஸ் நேரம் கேட்டார்” எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அதேபோல், கடந்த வாரம், தினகரனை சந்திக்க மீண்டும் ஓ.பி.எஸ் நேரம் கேட்டார். அப்போது, இருவரும் இணைந்து செயல்படுவோம். நீங்கள் முதல்வராக இருங்கள் என ஓ.பி.எஸ் கூறி தினகரனை சந்திக்க அவர் நேரம் கேட்டார். ஆனால், திடீரென அதிமுக விழாக்களில் சசிகலாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். எனவே, அவர் மாறி மாறி பேசி வருவதாக தினகரன் என்னிடம் தெரிவித்தார் என தங்க தமிழ்ச்செல்வம் பேட்டியளித்தார்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி “அமமுகவை அதிமுகவுடன் இணைக்க டிடிவி தினகரன் தூதுவிட்டார். கட்சிகளை இணைத்துக்கொண்டு நீங்களே முதல்வர் பதவியில் இருங்கள் என கடந்த மாதம் தூதுவிட்டார். ஆனால், அவரின் கோரிக்கையை அதிமுக ஏற்காததாலேயே தற்போது ஓ.பி.எஸ் மீது பொய்யான பரப்புரை செய்கிறார். ஓ.பிஎஸ் மற்றும் எடப்பாடி இருவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்” என அவர் பேட்டியளித்துள்ளார்.
ஆனால், இதை தினகரன் மறுத்துள்ளர். நான் அப்படி பேசியிருந்தால் அதற்கு ஆதாரத்தை கொடுக்க சொல்லுங்கள் என அவர் பேட்டியளித்துள்ளார்.