Publish Date: Sun, 12 May 2019 (08:57 IST)
Updated Date: Sun, 12 May 2019 (08:58 IST)
மே 19 ஆம் தேதி 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது.
சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம். ஆனால் திமுகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கமாட்டோம் என அமமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ ‘ தங்க தமிழ்ச்செல்வன் தினகரனுக்கு பக்கத்தில் இருந்துகொண்டே அவருக்கு எதிரான செயலகளை செய்துகொண்டு இருக்கிறார். அவர் திமுகவுக்கு செல்ல இருக்கிறார் என்பதையே அவரது பேட்டிகள் உணர்த்துகின்றன. செந்தில் பாலாஜியைப் போல அவரும் திமுக நோக்கி செல்வார் என்றே நினைக்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூட்டணி என்ற அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையப்போவதாக சொல்கிறார்கள். அவர் வெளிப்படையாகத்தான் கூறியிருக்கிறார். எங்களிடம் தற்போது நான்கு எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பின் திமுகவோடு இணைந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும். துரோகத்தை ஒழிக்க அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுசேருவார்கள். இதில் என்ன கூட்டணி இருக்கிறது ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.