Publish Date: Fri, 15 Sep 2017 (13:03 IST)
Updated Date: Fri, 15 Sep 2017 (13:07 IST)
சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்கி வைக்கும் பணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா நியமனம் செல்லாது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர் எனவும், இனிமேல் அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, பொதுச்செயலாளருக்குள்ள அதிகாரங்கள் அனைத்தும் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த தினகரன், இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என சூளுரைத்தார். மேலும், இன்னும் இரண்டு நாட்களில் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என கெடுவும் விதித்தார். தற்போது நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். மேலும், விரைவில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்து சென்று அவர் ஜனாதிபதியிடமும் முறையிடுவார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தினகரன் “இந்த ஆட்சியை அகற்றும் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டோம். இன்னும் ஒரு வாரத்தில் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் வீட்டிற்கு சென்று விடுவார்கள். சசிகலாவால் மட்டுமே இவர்கள் இருவரும் பதவியை அடைந்தார்கள். ஆனால், அவருக்கே துரோகம் செய்து விட்டனர். எனவே, இனிமேல் நாங்கள் பொறுமை காக்க மாட்டோம்” என அவர் தெரிவித்தார்.