Publish Date: Mon, 06 Jun 2022 (15:00 IST)
Updated Date: Mon, 06 Jun 2022 (15:38 IST)
கல்வித் துறையில் தொடர்ந்து அரங்கேறி வரும் குளறுபடிகள் நல்லதல்ல என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் டிவிட்.
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழக அரசால் சரியான திட்டமிடுதல் இன்றி மேற்கொள்ளப்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியைப் பல இடங்களில் ஆசிரியர்கள் புறக்கணித்திருக்கின்றனர்.
விடைத்தாள் திருத்துவதில் தாமதம் ஏற்பட்டால், தேர்வு முடிவுகள் வெளியாவதிலும் மாணவச் செல்வங்கள் உயர் படிப்புகளில் சேர்வதிலும் தேவையற்ற தாமதம் ஏற்படும். கல்வித் துறையில் தொடர்ந்து அரங்கேறி வரும் இத்தகைய குளறுபடிகள் நல்லதல்ல. இனியாவது ஆசிரியர்களை எதிரி போல் நடத்துவதை நிறுத்திக்கொண்டு, அவர்களோடு அரசு சரியான முறையில் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.