Publish Date: Wed, 04 Jul 2018 (12:18 IST)
Updated Date: Wed, 04 Jul 2018 (12:21 IST)
கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரின் அலுவலகத்தினை முற்றுகையிட்ட திருநங்கைகளினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் நகரில், மாவடியான் கோயில் தெருவில் வசித்து வரும் திருநங்கைகளான துர்கா தேவி, நந்தினி, ஜமுனா, நிகிதா, ஸ்ரீ உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களிடத்தில் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த திருநங்கைகளில் நட்பு ரீதியில் நபிஷா நாயக் உள்ளிட்ட திருநங்கையும் வசித்து வருகின்றார். ஆனால், இந்த திருநங்கைகளை, ஒரு சில மற்ற திருநங்கைகள் மிரட்டுவதாகவும்., கட்டாய வசூலிலும் ஈடுபட வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரியும், மனு அளித்தும் எந்த வித பயனுமில்லாததால், எம்.எல்.ஏ அல்லது அமைச்சரிடம் புகார் அளிக்க திருநங்கைகள் முடிவெடுத்தனர். ஆனால், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் உள்ள கரூர் சட்டமன்ற தொகுதியின் அலுவலகமும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சரின் அலுவலகமும் பூட்டப்பட்டிருந்ததினால் மிகவும் பாதிப்படைந்த திருநங்கைகள் அங்கேயே திரண்டு முற்றுகையிட்டனர்.
அப்போது, திருநங்கைகள் எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள் என கதறி அழுதனர். சட்டமன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து துறையின் மானியக்கோரிக்கையின் போது, இந்த திருநங்கைகள் முற்றுகை மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.