Publish Date: Thu, 19 Dec 2019 (20:38 IST)
Updated Date: Thu, 19 Dec 2019 (20:39 IST)
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் லாரி ஓட்டுனர் ஒருவரை சுங்கச் சாவடிகளில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் மண்டையை உடைத்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
காவேரிப்பட்டணத்தில் சேர்ந்த அசோக் என்ற லாரி ஓட்டுநர் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கிருஷ்ணகிரியில் உள்ள சுங்கச் சாவடியில் பணிபுரியும் செண்பகவல்லி என்ற ஊழியர் லாரியை நிறுத்தி கட்டணம் கேட்டுள்ளார். கட்டணத்தை ஏடிஎம் கார்டு மூலம் ஸ்வைப் செய்ய ஏடிஎம் கார்டை பெண் ஊழியரிடம் லாரி டிரைவர் கொடுத்துள்ளார். அப்போது அவர் கட்டணத்தை பதிவுசெய்துவிட்டு ரகசிய எண்ணை பதிவு செய்யுமாறு கூறி உள்ளார்
ஆனால் லாரி ஓட்டுநர் மிகவும் மெதுவாக பதிவு செய்ததால் எண் பதிவாகவில்லை என தெரிகிறது. இதனால் கோபமடைந்த செண்பகவல்லி நன்றாக அழுத்தி ரகசிய எண்ணை பதிவு செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் செண்பகவல்லி திட்டியதாகவும் இதனையடுத்து ஒருவரை ஒருவர் வாக்குவாதம் செய்ததாகவும் தெரிகிறது.
ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த செண்பகவல்லி, லாரி ஓட்டுனரின் மண்டையில் ஸ்வைப் மிஷினால் தாக்கினார் இதனால் லாரி ஓட்டுனருக்கு ரத்தம் கொட்டியது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியில் இருந்த மற்ற லாரி ஓட்டுனர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து லாரி ஓட்டுனர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். காயமடைந்த லாரி ஓட்டுநர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். சுங்கச்சாவடி பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது