Publish Date: Tue, 11 Oct 2022 (09:12 IST)
Updated Date: Tue, 11 Oct 2022 (09:15 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என கூறப்பட்டுள்ள நிலையில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான அளவில் மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.