Publish Date: Thu, 28 Jan 2021 (08:04 IST)
Updated Date: Thu, 28 Jan 2021 (08:05 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம் இன்று திறக்கப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வேதா நிலையத்தில் என்னென்ன இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம். 10 கிரவுண்ட் பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்ததுதான் இந்த வேதா நிலையம். இதில் 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம் பெற்றுள்ளதாம். அவற்றில் 8376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப் பொருள்கள் அடங்கும்
மேலும் 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட தங்க நகைகள், 600 கிலோ 424 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்கள் ஆகியவை உள்ளன. மேலும் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கையை சித்தரிக்கும் புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், அவர் படித்த புத்தகங்கள் நினைவு பொருள்கள் ஆகியவை இந்த இல்லத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் இந்த வேதா நிலையம் திறக்கப்படுகிறது. இன்று காலை 11 மணிக்கு திறக்கப்படும் இந்த நினைவு இல்ல நிகழ்ச்சியில் முதலமைச்சர் உள்பட அனைத்து அதிமுக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது