Publish Date: Thu, 23 Oct 2025 (10:17 IST)
Updated Date: Thu, 23 Oct 2025 (10:18 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
மொத்தம் 4,662 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்ற இத்தேர்வுக்கு சுமார் 13.89 லட்சம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 11.48 லட்சம் பேர் தேர்வில் கலந்துகொண்டனர்.
தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டு விவரங்கள் தற்போது www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக நான்கு மாதங்கள் ஆன நிலையில், இந்த ஆண்டு 102 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது தேர்வர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கான அழைப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.