Publish Date: Fri, 05 Jan 2018 (15:55 IST)
Updated Date: Fri, 05 Jan 2018 (16:05 IST)
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழக போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
அந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் இன்று காலை முறையிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஊழியர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல், அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், எங்கள் தரப்பு நியாயங்களை கேட்காமல் நீதிமன்றம் இப்படி தீர்ப்பளித்துள்ளது நியாயமல்ல. எங்கள் பணம் 7 ஆயிரம் கோடியை தமிழக அரசு செலவு செய்துள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து நாங்கள் கூடி ஆலோசனை செய்வோம் என சிஐடியு தொழிற்சங்க தலைவர் சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.