Publish Date: Thu, 05 Jul 2018 (22:14 IST)
Updated Date: Thu, 05 Jul 2018 (22:17 IST)
சென்னையில் நடைபெறும் மருத்துவ கலந்தாய்வுக்கு வந்த மாணவரின் சான்றிதழ் தொலைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த மாணவருக்கு உதவி செய்ய தமிழக அரசு முன்வந்துள்ளது.
ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகன் பூபதி ராஜா என்ற மாணவர் மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக நேற்று தனது ஒரிஜினல் சான்றிதழ்களுடன் சென்னை வந்தார். ஆனால் அவருடைய சான்றிதழ்கள் அனைத்தும் எதிர்பாராத வகையில் காணாமல் போனது. இதனால், அவர் கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல் போனது மட்டுமின்றி அவரது வாழ்க்கையே கேள்விக்குறியானது.
இந்த செய்தி நேற்று அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. இந்த செய்தியை பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், தமிழக அரசு சான்றிதழ்களை தொலைத்த மாணவருக்கு உதவ வேண்டும் என வழக்கறிஞரிடம் கேட்டுகொண்டார்.
இதுகுறித்து அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் முனுசாமி நீதிபதி வைத்தியநாதனை இன்று சந்தித்து, பூபதி ராஜாவுக்கு மாற்று சான்றிதழ் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளது என்றும், மாணவன் அரசை அணுகினால் அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.