Publish Date: Sat, 01 Jan 2022 (13:23 IST)
Updated Date: Sat, 01 Jan 2022 (13:26 IST)
தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் முதலாக 1ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் தொடங்கி சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
ஜனவரி 3ம் தேதி முதல் பள்ளிகளை தொடர்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஜனவரி 10ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு தீவிரமடையும் பட்சத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆல் பாஸ் அளிக்கவும், 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்துவது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில் மாற்று அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.