Publish Date: Sat, 22 Feb 2020 (14:20 IST)
Updated Date: Sat, 22 Feb 2020 (14:23 IST)
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கோடைகாலத்தில் சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் உலகளாவிய கவனத்தை பெற்றது. மக்கள் பலர் தண்ணீர் தட்டுப்பாட்டால் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து தண்ணீர் கொண்டு வரும் நிலை ஏற்பட, ஐடி நிறுவனங்களோ தண்ணீர் பிரச்சினையால் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய கட்டளையிட்டன.
ஆனால் இந்த கோடைகாலத்தில் சென்ற ஆண்டை போல் தண்ணீர் பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆந்திராவில் கடந்த ஆண்டு பெய்த மழையால் கிருஷ்ணா நதியில் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் உள்ளதால் சென்னையில் உள்ள பூண்டி ஏரிக்கு கணிசமான அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஏரிகள் முழுவதும் தண்ணீர் இருப்பு இருப்பதால் இந்த கோடைகாலத்தில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கிவிடும் என்பதால் மீண்டும் நீர்நிலைகள் நிரம்ப வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.