Publish Date: Sat, 14 Apr 2018 (17:39 IST)
Updated Date: Sat, 14 Apr 2018 (21:16 IST)
எச்.ராஜா பரிதாப நிலையில் இருப்பதால் அவருக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கடந்த 10ஆம் தேதி சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், திரு.முருகன் காந்தி, அமீர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து எச்.ராஜா டுவிட்டரில், போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து, சீமான், திரு.முருகன் காந்தி, அமீர், கெளதமன், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரின் மீதும் வழக்கு தொடரப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், எச்.ராஜாவைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் நன்று அறிவார்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதே அவரின் வழக்கம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அநாகரிகமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
தமிழர்களால் பெரிதும் போற்றப்படும் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்திய அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றார். மேலும், எச். ராஜா பரிதாபத்திற்கு உரிய நிலையில் இருப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். அவருக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்