Publish Date: Fri, 30 Aug 2024 (16:13 IST)
Updated Date: Fri, 30 Aug 2024 (16:15 IST)
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதால் முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு குவியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருப்பதை அடுத்து இந்த கார் பந்தயத்திற்கு தேவையான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன .
இந்த நிலையில் பார்முலா 4 கார்ப்பந்தயம் குறித்து புதுச்சேரியில் பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னையில் விளையாட்டு துறை சார்பில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது என்று தெரிவித்தார்.
தொழில் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்ப்பதற்கு ஏதுவாக அமையும் என்றும் டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதால் தான் அங்கு தொழில் முதலீடுகள் கிடைக்கின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும் நல்ல எண்ணத்தோடு மேற்கொள்ளப்படும் முயற்சி என்பதால் நீதிமன்றமும் இந்த போட்டியை நடத்தலாம் என தீர்ப்பளித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.