தமிழக வெற்றிக் கழகம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க போகிறார் என்ற செய்தி வந்தபோது விஜய்க்கு ஆதரவாக பல முறை பேசியிருந்த சீமான், தவெகவுடன் கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் தவெகவின் முதல் மாநாட்டிற்கு பிறகு தவெகவுடன் கூட்டணி இல்லை, தனித்து போட்டி என சீமான் அறிவித்தார். அதை தொடர்ந்து பல மேடைகளில் தவெகவின் அரசியல் நிலைப்பாட்டையும் சீமான் விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் தவெக கட்சி திமுகவுடனோ, பாஜகவுடனோ கூட்டணி அமைக்காது என விஜய் அறிவித்ததால் தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவும் என பேசிக் கொள்ளப்படுகிறது.
அதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய சீமான் “அவர்கள் கட்சி (தவெக) தமிழுக்காக போராடுமா? என் நிலம், என் மக்களுக்காக பேசுமா? மலைகளை அழிப்பதையும், ஆறுகளை அழிப்பதையும் குறித்து பேசுவார்களா? அவர்கள் வாக்குக்காக பேசுகிறார்கள். நாங்கள் மக்கள் வாழ்க்கைக்காக நின்று பேசுகிறோம்.
2010ல் கட்சி தொடங்கியபோது திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அறிவித்தேன். இன்று வரை அத்தனை தேர்தல்களிலும் தோற்றாலும் தனித்தே தேர்தலை சந்தித்து வரும் ஒரே இயக்கம் நாம் தமிழர்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரியாரை கொள்கை வழிக்காட்டியாக சொல்கிறார்கள். நாங்கள் பிரபாகரனை, இரட்டைமலை சீனிவாசனை கொள்கை வழிகாட்டியாக கொண்டிருக்கிறோம். அவர்களுக்கும் எங்களுக்கும் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம். பெரியாரை வழிகாட்டி என சொல்லும் அவர்கள், பெரியார் தமிழை காட்டுமிராண்டு மொழி என்றும், சிலப்பதிகாரத்தை விலைமாதர் காப்பியம் என்று கூறியதையும் ஏற்கிறார்களா?” என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Edit by Prasanth.K