Publish Date: Tue, 17 Mar 2020 (08:24 IST)
Updated Date: Tue, 17 Mar 2020 (08:32 IST)
ஐடி அலுவலகமாக மாறிய பண்ணை தோட்டம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தி வருகின்றனர். யாரும் அலுவலகம் வர வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர்கள் தேனி அருகே உள்ள பண்ணை வீட்டில் இயற்கையான சூழ்நிலையில் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். தேனி அருகே உள்ள அனுமந்தன்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றிவருகிறார். கொரோனா காரணமாக பெங்களூரில் பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தி வந்த நிலையில் அரவிந்தன் தனது தலைமையிலான ஊழியர்கள் 8 பேர்களை அனுமந்தன்பட்டிக்கு அழைத்து வந்து தங்களது பண்ணை தோட்டத்தில் தங்க வைத்து அங்கிருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்
இதுவொரு புதுமையான அனுபவமாக இருப்பதாகவும் ஊழியர்கள் இயற்கையான சூழ்நிலையில் இளநீர் உள்பட இயற்கை உணவுகளை சாப்பிட்டு காற்றோட்டமான பகுதியில் வேலை செய்வது என்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியாக இருப்பதாக இங்கு பணியை செய்து வரும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்