Publish Date: Thu, 26 Jul 2018 (16:07 IST)
Updated Date: Thu, 26 Jul 2018 (16:10 IST)
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதாரரை மதுரை மருத்துவமனையிலிருந்து சென்னை அழைத்து வர நிர்மலா சீதாராமன் உதவி செய்ததற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ்-ஸின் சகோதரர் பாலமுருகனை மதுரை அப்போலோவிலிருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்ற, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை கொடுத்து உதவிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை செய்தியாளர்களிடம் வெளிப்படையாக ஓ.பி.எஸ் கூறி விட, தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதனால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன் தன்னை சந்திக்க வந்த ஓ.பி.எஸ்-ஐ சந்திக்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன் “ நிர்மலா சீதாராமனின் நடவடிக்கைகளை மக்கள் கவனித்து வருகிறார்கள். மக்களை முட்டாள்கள் என நினைத்தால் தேர்தலின் போது மக்கள் பாடம் கற்றுக்கொடுப்பார்கள்.
இதை விட பெரிய காமெடி என்னவெனில், தமிழகத்தின் முதல்வராக நிர்மலா சீதாராமனை அமர்த்த பாஜக திட்டமிட்டு வருகிறது. எனவேதான், ஓ.பி.எஸ்-க்கு அவர் உதவி செய்துள்ளார்” என அதிரடியாக பேட்டியளித்தார்.